சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட அணிகளின் பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த சில சீசன்களை விடவும் இந்த சீசனில் பொழுதுபோக்கு சற்று அதிகமாக இருந்தன. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து Houllihan Lokey என்ற நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,930 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கு தோனி முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
அதேபோல் 2வது இடத்தில் ஆர்சிபி அணி உள்ளது. ஆர்சிபி அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், விராட் கோலியின் பிராண்ட் வேல்யூ ஆர்சிபி அணிக்கு வலு சேர்த்துள்ளது. தொடர்ந்து 3 முறை சாம்பியனான கேகேஆர் அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,805 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் 4வது இடத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,704 கோடியாக உள்ளது. ஆர்சிபி அணியின் பிராண்ட் வேல்யூவை விடவும் மும்பை அணி குறைவாக இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,111 கோடியாகவும், ஐதராபாத் அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,103 கோடியாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது.