ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடப்பு சாம்பியனாக களம் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று ஒரு தோல்வியை அடைந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இன்று ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தோனிக்கு இதுதான் கடைசி தொடர் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இதனால் தோனியின் பேட்டிங் சரவெடியை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று போட்டிகளில் தோனி ஒரு முறை தான் பேட்டிங் செய்திருக்கிறார். அதில் டெல்லி அணிக்கு எதிராக 16 பந்துகளை எதிர் கொண்டு 37 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் தோனி பேட்டிங்கில் நல்ல பார்மில் இருப்பதால் அவர் பேட்டிங் வரிசையில் முன்பே வந்து களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ருதுராஜ் ,ரச்சின் ரவிந்த்ரா, ரஹானே, டேரல் மிட்செல் ஆகியோருக்கு பிறகு தோனி பேட்டிங் செய்ய வரவேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது ஜடேஜா பேட்டிங்கில் சரியாக விளையாடுவதில்லை. கடைசியாக அவர் விளையாடிய 25 இன்னிங்ஸில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 21 ரன்கள் தான். இதனால் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளிவிட்டு தோனி சிவம் துபே உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துபே தற்போது நல்ல பார்மில் இருப்பதால், இடது கை வலது கை என காம்பினேஷனில் நடுவரிசைசியில் தோனி களமிறங்கினால், அதில் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் நன்மை பயக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்கு தோனியின் இன்னிங்ஸ் மிகவும் முக்கிய காரணமாக அமையும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தோனி கடந்த சீசன் போல் இல்லாமல் இம்முறை அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். தோனி பேட்டிங்கில் முன் வரிசையில் வந்தால் சிஎஸ்கே அணி ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு மோயின் அலி இல்லை ஏதேனும் சுழற் பந்துவீச்சாளரை சேர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.