பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பாராத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணியிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. சிஎஸ்கே அணி 201 ரன்கள் அடித்து இருந்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்க முடியும்.
ஆனால் அவர்கள் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ருத்ராஜ் முதல் முறையாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவியேற்று 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

மேலும் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு தொடரில் பங்கேற்கவில்லை. சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக கருதப்படும், தொடக்க வீரர் கான்வே, வேகப்பந்து வீச்சாளர் பதிரானா, தீபக் சாகர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. இதை போன்று மோயின் அலி, முஸ்தஃபீசுர் ரஹ்மான் போன்ற முக்கிய வீரர்களும் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று விலகி விட்டார்கள்.
தோனிக்கும் காயம் குணமாகவில்லை. இப்படி பல தடைகளை தாண்டி தான் சிஎஸ்கே அணி 14 புள்ளிகளை பெற்று பிளே ஆப்க்கு தகுதி பெற போராடியது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியில் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா ருதுராஜை பாராட்டு இருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன் நின்று தலைமை தாங்கி பிரமாதமாக ருதுராஜ் வழி நடத்தியதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத்தில் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு பல வெற்றிகள் வந்து குவியும். நீங்கள் இன்னும் வருங்காலத்தில் ஜொலித்துக் கொண்டே இருப்பீர்கள் என்று ருதுராஜ்க்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று போட்டி முடிந்த போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ரெய்னாவிடம் தோனிக்கு இது கடைசி போட்டியா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிச்சயம் இல்லை என்று ரெய்னா பதில் அளித்தார்.