சென்னை: இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புதிய கேப்டனுக்கு கீழ் விளையாடும் சூழல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008 முதல் 2023 வரை சிஎஸ்கே அணியின் ஒரே கேப்டனாக எம்எஸ் தோனி மட்டுமே செயல்பட்டு வருகிறார். 2022ஆம் ஆண்டு ஜடேஜாவின் கைகளில் கேப்டன்சி வழங்கப்பட்டாலும், அவரின் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் தோனியின் கைகளுக்கு கேப்டன்சி சென்றது. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடர் மூலமாக தோனி சிஎஸ்கே அணிக்காக கடைசி ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ளார்.

42 வயதாகும் தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் அடுத்த சீசனுக்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ளதால், தோனி ஓய்வை அறிவிப்பதே சிஎஸ்கே அணிக்கும் நல்ல முடிவாக இருக்கும். இதனிடையே ஐபிஎல் மினி ஏலத்தின் போது சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெம்மிங், தோனிக்கு பின் அடுத்த கேப்டன் யாரென்பது குறித்த 10 ஆண்டுகளாக திட்டங்களை வகுத்து வந்துள்ளோம் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இதனால் அடுத்த சீசனில் தோனி வெறும் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாடுவார் என்றும், கேப்டன்சி மட்டுமே செய்வார் என்று சில தகவல் வெளியாகின. இதனிடையே எஸ்ஏடி20 லீக் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் புதிய கேப்டனுடன் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக பயிற்சியாளர் பிளமிங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் சிஎஸ்கே பயிற்சி முகாமிலேயே இந்த விவகாரம் குறித்து தோனியின் பயிற்சியாளர் பிளமிங் ஆலோசிக்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணிக்கான அடுத்த கேப்டனுக்கான போட்டியில் ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் உள்ளனர். இதில் ஜடேஜா ஏற்கனவே கேப்டன்சியில் சொதப்பியதால், ரஹானே vs ருதுராஜ் என்று போட்டி உள்ளது. சிஎஸ்கே நிர்வாகம் எப்போதும் அனுபவ வீரர்களுக்கு சாதகமாக செயல்படும் என்பதால், அடுத்த கேப்டனாக ரஹானே செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இளம் வீரரை கேப்டனாக நியமனம் செய்தால், வியாபார ரீதியாகவும் சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.