மும்பை : இதற்கு முன் நடந்த 2024 ஐபிஎல் ஏலத்தில் சர்ஃபராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் அவர் ரன் குவித்தாலும் ஐபிஎல் தொடரில் அவர் சரியாக செயல்படுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதுதான் அவரை எந்த அணியும் வாங்காமல் போகக் காரணம்.
இதற்கு முன் அவர் சில ஐபிஎல் அணிகளில் இருந்துள்ளார். ஆனால், அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அதன் பின் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. ஆனால், தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் அதிரடி ஆட்டம் ஆடியதை அடுத்து அவரை தங்கள் அணியில் எப்படியாவது சேர்க்க வேண்டும் என சில அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சர்ஃபராஸ் கானை தங்கள் அணிக்கு இழுக்க முயற்சி செய்வதாக கூறப்பட்டது. தற்போது ஏலம் முடிந்த நிலையில், அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே ஏலத்தில் எந்த அணியும் வாங்காத ஒரு வீரரை மாற்று வீரராக தேர்வு செய்ய முடியும்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிவம் துபே காயத்தில் சிக்கி இருக்கிறார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அவரால் முழு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாது என கூறப்படும் நிலையில் அவரை அணியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே அணி வாங்கலாம் என கூறப்பட்டது.
தற்போது சிஎஸ்கே அணியுடன் மேலும் மூன்று அணிகள் போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேசிய அணியில் ஆடுவதை விட பல நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் ஆடவே விரும்புகிறார்கள் என்பதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவர்களுக்கு ஐபிஎல் தொடரின் போது ஒப்புதல் அளிக்காமல் போகலாம் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மூன்று ஐபிஎல் அணிகள் பெரிதாக பாதிக்கப்படும்.
முஜீப் உர் ரஹ்மானை வாங்கி இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பாசல்ஹக் ஃபரூக்கியை வாங்கி இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் நவீன் உல் ஹக்கை வாங்கி இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆகிய மூன்று அணிகளும் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேட வேண்டும். அதனால் சர்ஃபராஸ் கானை அந்த அணிகளும் தங்கள் அணியில் சேர்க்க முயற்சி செய்யலாம். அதனால், சர்ஃபராஸ் கானை இழுக்க நினைக்கும் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்படலாம்.