மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருக்கும் நிலையில், அதனால் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதாக ஐபிஎல் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் ஏற்பட்ட குழப்பம் போல மும்பை இந்தியன்ஸ் அணியிலும் 2024 ஐபிஎல் தொடரில் ஏற்படக் கூடும் என பல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐபிஎல் துவங்கிய 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்து வந்தார். தனக்கு வயதான நிலையில் சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனை தயார் செய்ய வேண்டும் என முடிவு செய்த தோனி 2021 ஐபிஎல் தொடரின் போதே ஜடேஜாவை பல முடிவுகளை எடுக்க வைத்து அவரை தயார் செய்தார்.
அதன் பின்னர் 2022 ஐபிஎல் தொடரின் போது ஜடேஜாவிடம் கேப்டன் பதவி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. முதல் எட்டு போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே அணி பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது, ஜடேஜாவின் கேப்டன்சி மீது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது.
ஐபிஎல் அணிகள் ரசிகர்களை சார்ந்தே உள்ளன. குறிப்பாக சிஎஸ்கே அணியின் ரசிகர்களை போல வேறு எந்த அணிக்கும் ரசிகர் கூட்டம் இல்லை என்றே சொல்லலாம். இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணியை தடை செய்த போதும், அதன்பின் மீண்டு வந்த போது மாபெரும் வரவேற்பு கொடுத்த ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர்களே எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து தோனி மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி ஏற்றார். ஒரே அணிக்குள் கேப்டன் பதவி மாறினாலும், ஜடேஜா மீண்டும் தோனி தலைமையில் ஆடி 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் அணியின் வெற்றியை உறுதி செய்து கோப்பை வென்று கொடுத்தார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013இல் இருந்து அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியில் தோனியே கேப்டன் பதவிக்கு அடுத்த நபரை தயார் செய்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
கிட்டத்தட்ட சிஎஸ்கே அணி போலவே ஐபிஎல் தொடரில் மாபெரும் ரசிகர் கூட்டம் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. தங்கள் அணியை விட்டு விலகி வேறு அணியில் கேப்டனாக இருந்த ஒருவரை மும்பை அணி கேப்டனாக கொண்டு வந்துள்ளது. ஒருவேளை 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவால் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட மும்பை அணியை அழைத்து செல்ல முடியவில்லை என்றால் அப்போது சிஎஸ்கே அணியில் நடந்தது போல ரசிகர்கள் ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார்கள்.
ரோஹித் சர்மாவை கேப்டனாக்க விரும்பவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பாண்டியா தலைமையில் பிளே-ஆஃப் சுற்றுக்காவது செல்ல வேண்டும். அதைக் குறித்து இப்போதே ரசிகர்கள் விமர்சனத்தை முன் வைக்கத் துவங்கி இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா இந்த அழுத்தத்தை தாங்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.