சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. ஆறாவது முறையாக தோனி தலைமையில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சிஎஸ்கே அணி பலம் வாய்ந்த அணியாக விளங்கினாலும், தற்போது தொடர் தொடங்குவதற்கு முன்பு மூன்று முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் ரச்சின் ரவீந்தரா,டேரல் மிட்செல் போன்ற மாற்று வீரர்கள் அந்த இடத்திற்கு இருக்கிறார்கள். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் நல்ல பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது முக்கியம். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இலங்கை அணியின் பதிராணாவும், வங்கதேச அணியின் முஸ்தஃபிகர் ரஹ்மானும் இருந்தனர்.
தற்போது இருவருக்குமே காயம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் முழுவதுமாக களமிறங்குவார்களா என்று தெரியவில்லை. இதனால் சிஎஸ்கே அணிக்கு பெரிய மைனஸ் ஆக இது அமைந்துள்ளது. இந்த வகையில் சிஎஸ்கே அணி இந்த குறையை எப்படி சமாளிக்க போகிறது என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மாற்று வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்களா? இல்லை இருக்கும் வீரர்களை வைத்து சிஎஸ்கே சமாளிக்க போகிறதா என்றும் தெரியவில்லை. அந்த வகையில் தொடக்க சில போட்டிகளில் முழுக்க முழுக்க இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து சிஎஸ்கே அணி சமாளிக்கலாம் என தெரிகிறது.
மினி ஏலத்தில் சர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி வாங்கியிருக்கிறது. இதனால் தீபக்சாகர் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு பெரிய கவலை இல்லை. இந்த நிலையில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக துசார் தேஷ் பாண்டே மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் இருக்கிறார்கள்.
இதில் முகேஷ் சௌந்தரியை சிஎஸ்கே அணி டெட் பௌலிங்கிற்கு பயன்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று ஆல்ரவுண்டர் ராஜவர்தன் ஹங்கேர்கருக்கு வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவரை இம்பாக்ட் வீரராக கூட பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு இருப்பது அணிக்கு நல்லது என்றாலும் சிஎஸ்கே அணி இந்த வீரர்களை வைத்துக்கொண்டு குறையை சமாளித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.