லக்னோ : 2024 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடி கொடுத்து வாங்கப்பட்டு இருந்தார் நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேரில் மிட்செல். இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆறு போட்டிகளில் இடம் பெற்றார். ஆனால், அவரால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை.
முதல் 10 பந்துகள் வரை நிதான ஆட்டம் ஆடி விட்டு அதன் பின்னர் அவர் வேகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்த்து ஏமாந்த சிஎஸ்கே நிர்வாகம். டேரில் மிட்செல் 6 போட்டிகளில் 135 ரன்கள் சேர்த்தார், ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 125 மட்டுமே. கடைசி 5 ஓவர்களிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் இந்த அளவிலேயே இருந்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வேறு வழியின்றி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தங்களின் முன்னாள் ஆல் - ரவுண்டர் மொயீன் அலியை களமிறக்கியது. அவர் முதல் 15 பந்துகள் வரை படு நிதானமாக ஆடினார். இவரும் டேரில் மிட்செல் போலவே சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக நினைத்த போது வேகம் எடுத்தார் மொயீன் அலி, போட்டியின் 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து, அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தார்.
மொயீன் அலி சுழற் பந்துவீச்சாளராகவும் செயல்படுவார். தற்போது அவர் பேட்டிங்கும் நல்ல நிலையில் உள்ளது. எனவே, இனி வரும் போட்டிகளில் மொயீன் அலியே சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டேரில் மிட்செல்லுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.
கடந்த சீசன்களில் மொயீன் அலி ஆல் - ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதே போல 2024 ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.