மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனி பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டார். வெறும் நான்கு பந்துகள் மட்டுமே ஆடி இருந்தாலும் அதில் மூன்று சிக்ஸர் அடித்து போட்டியை மாற்றினார். இந்த நிலையில் தோனி இந்த ஐபிஎல் தொடரில் காயத்துடன் தான் விளையாடி வருகிறார், அவர் எந்த அளவுக்கு வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடுகிறார் என யாருக்கும் தெரியாது என சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் கூறி இருக்கிறார்.
பலரும் தோனியை கூடுதல் நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தோனி கடைசி ஓவரில் மட்டுமே பேட்டிங் இறங்கி வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்ச்சியின் காரணமாக கடைசி 4 ஓவர்களில் அவர் பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில் தோனி வலியுடன் ஆடி வருவதை எரிக் சிம்மன்ஸ் உறுதி செய்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், "மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்குள் சிஎஸ்கே அணியை சுருட்டலாம் என நினைத்தார்கள். ஆனால், திடீரென அவர்கள் 206 ரன்கள் என்ற ஸ்கோரை பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் தோனி இது போல எங்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். களத்துக்கு சென்று முதல் பந்தில் அப்படி ஒரு பெரிய சிக்ஸ் அடித்து விட்டு, அதை தொடர்ந்து செய்வது என்பது வியப்பானது" என்றார்.
மேலும், "தோனி வலைப் பயிற்சியில் அபாரமாக பேட்டிங் செய்கிறார். அதே போல போட்டியிலும் ஆடியது மற்றொரு "தோனி தருணம்". நங்கள் கடைசி ஓவர்களில் பந்து வீச பயிற்சி மேற்கொள்ளும் போது தோனி பேட்டிங் செய்வதாக நினைத்துக் கொள்வோம். அப்படி அவருக்கு எதிராக பந்து வீசுவதாக நினைத்து எங்கள் திட்டத்தை வகுத்தால் நாங்கள் நிச்சயம் போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்." என்றார் எரிக் சிம்மன்ஸ்.
மேலும் தோனியின் காயம் பற்றி பேசுகையில், "அவருடைய காயம் குறித்து அவரை விட மற்றவர்களே அதிகம் கவலையில் இருக்கிறோம். நான் பார்த்ததிலேயே அவர் கடினமான மனிதர். அவர் எந்த அளவுக்கு வலியில் இருக்கிறார் என எங்களுக்கு தெரியாது. அவர் அந்த வலியுடனே தனது பணியை செய்து வருகிறார். அவருக்கு நிச்சயம் வலி இருக்கிறது. ஆனால், அவர் அதை கண்டு கொள்ளாமல், என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். ஆனால், நாம் தான் அவரது காயம் குறித்து அதிகம் கவலையில் இருக்கிறோம்" என்றார் எரிக் சிம்மன்ஸ்.