ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பேட்டிங் சரியாக இல்லாதது தான்.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்த நிலையில் அவர்களால் தொடர்ந்து பவுண்டரி அடிக்க முடியவில்லை. தோனி கடைசி 3 பந்து இருக்கும் போது தான் களத்துக்கு வந்தார். அவரால் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் பவுண்டரி அடிக்க திணறிய நிலையில் கடைசி 5 ஓவரில் டேரில் மிட்செலுக்கு பதிலாக தோனி களமிறங்கி இருந்தால் அவர் தனது அனுபவத்தின் மூலம் அதிக பவுண்டரிகள் அடித்து இருக்கக் கூடும் என அம்பத்தி ராயுடு கூறினார். அதே போல முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் இதே கருத்தை முன் வைத்துள்ளனர்.
அம்பத்தி ராயுடு இதுபற்றி பேசுகையில், "இன்னிங்ஸின் 18வது ஓவரில் தோனி களத்தில் இருந்திருக்க வேண்டும். மெதுவான டிராக்குகளில் ரன்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் மற்றும் அணியின் தேவை என்ன என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்," என்றார்.
"தோனி ஆரம்பத்திலேயே களத்தில் இறங்கியிருந்தால் ஸ்கோர் 180 அல்லது 185-ஐ எட்டியிருக்கும். மொத்தத்தில் 15-20 ரன்கள் சேர்த்தால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்" என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
"டேரில் மிட்செலுக்கு முன் தோனி பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். அந்த நியூசிலாந்து வீரர் தனது முதல் ஐபிஎல் சீசனை விளையாடுகிறார், மேலும் அணியின் ரன் ரேட்டை எப்படி சரிசெய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. சென்னையில் இதே டிராக்கில் விளையாடுவதால் தோனிக்கு இதுபோன்ற நிலைமைகளில் போதுமான அனுபவம் உள்ளது. முன்னதாக வந்திருந்தால் தோனி எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடித்திருக்க முடியும்," என்று கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறினார்.