சென்னை : 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத போது தனது குடும்பத்தினருக்கு கொடுத்த சத்தியத்தை, 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி நிறைவேற்றியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி ஒரே ஒரு இன்னிங்ஸ் மூலமாக ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி, ரஷீத் கான் பவுலிங்கில் 2 சிக்சர்களை விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதில் ஐபிஎல் தொடரில் அறிமுக இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் சமீர் ரிஸ்வி ரூ.8.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்காக அறிமுகமும் செய்யப்பட்டார். உள்ளூர் வீரர் ஒருவரை நேரடியாக சிஎஸ்கே அணி போட்டியில் களமிறக்கிய வெகு காலங்களாகிவிட்டது. இதனால் சமீர் ரிஸ்வியிடம் ஸ்பெஷல் திறமை இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
20 வயதேயாகும் சமீர் ரிஸ்வி ஐபிஎல் தொடரில் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததற்கு பின் ஒரு கதை இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் 2020ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று வருகிறார். அப்போது முதலே எந்த அணியும் சமீர் ரிஸ்வியை வாங்க முன் வரவில்லை. 16 வயதில் ஐபிஎல் அணியால் வாங்கப்படாதது அவர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.
அப்போது அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள், சகோதரர்கள் என்று அனைவரிடமும் ஐபிஎல் தொடரில் களமிறங்கி சந்திக்கும் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதன்படி ரஷீத் கான் வீசிய முதல் பந்திலேயே சமீர் ரிஸ்வியை சிக்சர் அடித்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளார். சொன்ன வார்த்தையை காப்பாற்றிய சமீர் ரிஸ்வியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்களான ஷேன் வாட்சன் மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோருக்கான சிறந்த மாற்று வீரரை சிஎஸ்கே அணி கண்டறிந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் சமீர் ரிஸ்விக்கு அடுத்தடுத்த போட்டிகளில் அதிகளவிலான பேட்டிங் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.