சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக எடு வீரர்களை அணியில் இருந்து நீக்கி இருக்கிறது. தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பெயர் உள்ளதா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் சிஎஸ்கே அணியின் அறிவிப்பை எதிர்நோக்கி இருந்தனர்.
2024 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களின் வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் யாரை அணியில் வைத்துக் கொள்ளலாம், யாரை நீக்கலாம் என இன்றே முடிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் இருந்து எட்டு வீரர்களை நீக்குவதாக அறிவித்து இருக்கிறது.
அந்த எட்டு வீரர்கள் - பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், டிவைன் ப்ரீடோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, சிசாண்டா மகளா, ஆகாஷ் சிங்.
இதில் தோனி பெயர் இடம் பெறவில்லை. எனவே, அவர் அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆடுவது உறுதி என சிஎஸ்கே ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மற்ற எட்டு வீரர்களை நீக்கியதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 32.20 கோடி பணம் கையிருப்பில் கிடைக்கும். அதை வைத்து ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி பல வீரர்களை வாங்க முடியும்.
இவர்களில் அம்பதி ராயுடு கடந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்று விட்டார். பென் ஸ்டோக்ஸ் காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் விலகுவதாக அறிவித்து விட்டார். மற்ற வீரர்களை சிஎஸ்கே அணி விலக்கி இருக்கிறது. தற்போது 32.20 கோடி கையில் இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை வாங்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
சிஎஸ்கே அணியில் நீக்கப்பட வீரர்களின் மதிப்பு - பென் ஸ்டோக்ஸ் (16.20 கோடி), அம்பதி ராயுடு (6.7 கோடி), கைல் ஜேமிசன் (1 கோடி), டிவைன் ப்ரீடோரியஸ் (50 லட்சம்), பகத் வர்மா (20 லட்சம்), சுப்ரான்ஷு சேனாபதி (20 லட்சம்), சிசாண்டா மகளா (50 லட்சம்), ஆகாஷ் சிங் (20 லட்சம்).