சென்னை : நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் மட்டும் விளையாட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பல்வேறு மாற்றங்களை அணிக்குள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பே புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பதிவியில் இருந்து தோனி விலகியது தெரிய வந்தது. சிஎஸ்கே அணியை எதிர்காலத்திற்கு தயாராகும் பட்சத்தில் தோனியே முன் வந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதற்கேற்ப சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் சொந்த மண்ணில் ஆடிய முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தினார். அதேபோல் கேப்டனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் செயல்பாடுகள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி 3வது போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விசாகப்பட்டினம் மைதானத்தில் களமிறங்கவுள்ளது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராக தோனி விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் அவினாஷ் ஆரவல்லி விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இவர் இந்திய யு19 அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார் என்பதோடு, ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.
இதனால் விசாகப்பட்டினம் மைதானத்தில் அவினாஷ் ஆரவல்லியை களமிறக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் களத்தில் தோனியின் செயல்பாடுகள் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு உதவியாக உள்ளது. தோனி இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் எப்படி செயல்படுகிறார் என்பதை பரிசோதிக்கும் வகையில் இந்த முடிவை தோனியும் சேர்ந்தே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தை கடந்து வெளி மாநிலங்களில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளில் தோனி களமிறங்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தனது கடைசி போட்டி சென்னையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் தோனி தீவிரமாக இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.