விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தல தோனி இடது காலில் ஏற்பட்ட காயத்துடன் களமிறங்கி பேட்டிங் செய்தது தெரிய வந்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய நட்சத்திர வீரர் தோனி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசி அசத்தினார். தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னரும், தோனி ரசிகர்களுக்காக ஆடிய ஆட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியானது. தோனியின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக அவினாஷ் ஆரவல்லி களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோனியே களமிறங்கி பேயாட்டம் ஆடி அசத்தியுள்ளார்.
இதனிடையே 19வது ஓவரின் போது ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்து தோனி பேட்டிங் செய்தார். அதேபோல் கடைசி ஓவரிலும் ரன்கள் ஓட தோனி மறுத்தார். பிரைம் பேட்ஸ்மேனான ஜடேஜாவுக்கு ஏன் தோனி ஸ்ட்ரைக் கொடுக்க மறுக்கிறார் என்று ரசிகர்களுக்கும் புரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்த பின் விசாகப்பட்டினம் மைதான ஊழியர்களுடன் தோனி புகைப்படம் எடுத்து கொண்டார்.
அப்போது அவரது இடது காலில் ஐஸ் பேக் கட்டப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. தோனி காயத்துடன் களமிறங்கி பேட்டிங் செய்தாரா என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியின் காலில் ஐஸ் பேக் கட்டப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு ஓய்வறை செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தோனி பேசுகையில், இது ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்று கூறியதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது. அதேபோல் "ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்" என்று பாடலையும் பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளது. இதனால் தோனி காயத்துடன் ஆடியதால் ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். சிஎஸ்கே அணி அடுத்தப் போட்டியை ஏப்ரல் 5ஆம் தேதி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இன்னும் 4 நாட்கள் இருப்பதால் தோனிக்கு சரியான ஓய்வு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் தோனி நிச்சயம் அடுத்த போட்டியிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.