விசாகப்பட்டினம் : சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக செயல்படுவது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். ஐபிஎல் தொடருக்கு ஒருநாள் முன்பாக இந்த அறிவிப்பு வெளியான நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களும் வரவேற்றனர். சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அவரது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் எப்படி நிரப்பு முடியும் என்ற சந்தேகமும் ஒரு பக்கம் எழுந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் 2 போட்டிகளிலும் வென்று தன் மீது சந்தேகம் கொண்டவர்களுக்கு பதிலடி கொடுத்தார். சிஎஸ்கே பவுலிங்கின் போது சில அறிவுரை மற்றும் ஃபீல்டிங் மாற்றங்களை தோனி செய்தாலும், பவுலிங் மாற்றங்கள் முழுக்க முழுக்க ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே செய்தார்.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து டுதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளி மாநிலத்தில் களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதன்பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுதான் முதல் போட்டி. அதனால் இந்த பிட்ச் குறித்து பெரியளவில் தகவல் இல்லை. அதனால் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளோம். எங்களின் திட்டம் ஒன்று தான். தனி நபர்கள் அனைவரும் அவர்களின் பணியை சரியாக செய்வது தான். ஒவ்வொருவரும் தங்களின் யுத்தத்தில் வெல்வதே எங்களின் திட்டம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ருதுராஜ் கெய்க்வாட், நான் ஏற்கனவே எனது மாநிலமான மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதேபோல் ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வென்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் எனக்கு உதவியாக அணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.