விசாகப்பட்டினம் : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா ஒரே ஓவரில் மிட்சல் மார்ஷ் மற்றும் ஸ்டப்ஸ் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. விசாகப்பட்டினம் மைதானம் முதல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்பின் டெல்லி அணி தரப்பில் இளம் வீரர் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் 4 ஓவர்கள் வரை அடக்கி வாசிக்க தீபக் சஹர் வீசிய 5வது ஓவருக்கு பின் அதிரடிக்கு திரும்பினர். இதனால் டெல்லி அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் சேர்த்திருந்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் பதிரனாவின் அசத்தலான கேட்ச் காரணமாக வார்னர் 52 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜடேஜா சுழலில் சிக்கி பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் டெல்லி அணி தரப்பில் ரிஷப் பண்ட் - மிட்சல் மார்ஷ் இருவரும் அட்டாக்கை தொடர்ந்தவர். மிட்சல் மார்ஷ் அதிரடியாக சில சிக்சர்களை விளாச, ஆட்டத்தில் டெல்லி அணியின் கைகள் ஓங்கியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இளம் வீரர் பதிரானாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரின் 4வது பந்தை பதிரானா 150 கிமீ வேகத்தில் யார்க்கராக வீச, ஸ்டம்புகள் பறந்தது. இதனால் மிட்சல் மார்ஷ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்-க்கும் அதே வேகத்தில் இன்னொரு யார்க்கரை பந்தை பதிரானா வீச, மீண்டும் ஸ்டம்ப்கள் பறந்தது. இதன் மூலமாக ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி பதிரானா அசத்தினார். பின்னர் 19வது ஓவரை வீசிய நிலையில் ரிஷப் பண்ட் 6, 4, 4 என்று அதிரடி காட்ட, 5வது பந்தில் அவரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் பதிரானா. இதன் மூலமாக 4 ஓவர்களில் பதிரானா 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.