விசாகப்பட்டினம் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியின் விளிம்பில் இருந்த போதும் தோனி பேட்டிங் செய்ய வந்தது முதல் அவர் அடித்த ஒவ்வொரு ரன்னையும் ரசிகர்கள் கொண்டாடினர்.
அதிலும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார். இதை அடித்து விசாகப்பட்டினம் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் தான் தோனி தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து இருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2005இல் அவர் 148 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஆடுவதாக சொல்லப்படும் நிலையில் தோனி மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 191 ரன்கள் குவித்தது. அடுத்து சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போது துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 2 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின் ரஹானே 45, டேரில் மிட்செல் 34 ரன்கள் எடுத்த போதும் இலக்கை அடைய ஒரு ஓவருக்கு 15 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு சென்றது போட்டி. சிவம் துபே 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆனார். அதன் பின் ஜடேஜா களத்தில் நிற்க, தோனி பேட்டிங் செய்ய வந்தார்.
அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார். அதன் பின் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார் தோனி. 4 ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். தோனி அதிரடி ஆட்டம் ஆடிய போதும் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.