விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் அதிரடியான ஆட்டம் குறித்து அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள கருத்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்து தோல்வியடைந்தது.

இருப்பினும் கடந்த 2 போட்டியில் சிஎஸ்கே அணி பெற்ற வெற்றியை விடவும், இந்த போட்டியில் சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தல தோனி, 307 நாட்களுக்கு பின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கி பேட்டிங் ஆடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க விசாகப்பட்டினம் மைதானமே அதிர்ந்தது.
அதன்பின் கலீல் அஹ்மத் பவுலிங்கில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு அபார சிக்சரை விளாச, கடைசி ஓவரை வீச நார்கியே வந்தார். அதில் 4, 6, 4 மற்றும் 6 என்று 20 ரன்களை விளாசி அசத்தினார் தோனி. அதிலும் கடைசி பந்தில் தனது ஸ்டைலில் தோனி அடித்த சிக்சரால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் தோல்வியை பற்றி கவலைப்படாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் தான் இப்படி தோனியின் ஆட்டத்தை பார்த்து கொண்டாடுகிறார்கள் என்றால், தோனியின் மனைவி சாக்ஷியும் அப்படித்தான் கொண்டாடி இருக்கிறார். தோனியின் ஆட்டம் குறித்து அவரின் மனைவி சாக்ஷி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதலில் ரிஷப் பண்ட்-க்கு வாழ்த்துகள். ஹாய் மாஹி.. உங்களின் அதிரடியான பேட்டிங்கால் நாம் தோல்வியடைந்ததை கூட மறந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் தோனிக்கு எல்க்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தையும் சாக்ஷி இணைத்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகளின் தோனியுடன் இருக்கும் அவரின் மனைவி சாக்ஷி, மகளின் தேர்வுகள் காரணமாக வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.