மும்பை : பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரையும் நீக்கியது அஜித் அகர்கர் தான் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன்பாக பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியது. அதில் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு பிசிசிஐ அவர்கள் இருவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரஞ்சி டிராபி தொடரும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது சீனியர் வீரர்கள் சிலர் காயம் காரணமாக விலக, இந்திய அணி கிட்டத்தட்ட 2ஆம் கட்ட வீரர்களுடன் களமிறங்க வேண்டிய நிலை வந்தது. அதற்கு இளம் வீரர்களை தயார்ப்படுத்தும் வகையிலும், ஃபார்மில் இல்லாத வீரர்களை ரஞ்சி டிராபி தொடரில் விளையாட வைத்து ஃபார்முக்கு கொண்டு வரவும் தேர்வு குழு திட்டமிட்டது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரை ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் இருவருமே ரஞ்சி டிராபி தொடரில் விளையாட முனைப்பு காட்டவில்லை. இஷான் கிஷன் மொத்தமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாட விரும்பாமல் ஐபிஎல் தொடருக்கு தயாராகி கொண்டிருந்தார்.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் என்று கூறிவிட்டு கேகேஆர் அணியின் பயிற்சி முகாமிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இருவரின் பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்று பார்க்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரையும் நீக்கும் முடிவை அஜித் அகர்கர் தான் எடுத்தார்.
நான் பிசிசிஐ செயலாளர் மட்டும் தான். தேர்வு குழு எடுக்கும் முடிவை செயல்படுத்துவதே எனது பணியாகும். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டாலும் அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு வீரர்கள் யாரையும் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.