சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் பயன்படுத்தாத புதிய உத்தி ஒன்றை பயன்படுத்தத் துவங்கி உள்ளது. சிஎஸ்கே அணியை வீழ்த்த இருந்த ஒரே வழியும் அதன் மூலம் அடைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் எதிரணிகள் இனி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிகளில் கடும் அழுத்தத்தை சந்திக்க வழி வகுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் எதிரணிகளை கட்டுப்படுத்துவதே அந்த அணியின் பலமாக இருந்து வந்தது. தோனி பந்துவீச்சின் மூலம் எதிரணிகளை சிறப்பாக கட்டுப்படுத்தி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்று வெற்றி பெற வைக்க போராடுவார். அதே சமயம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் எப்போதுமே மந்தமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

ஆனால், 2023 ஐபிஎல் தொடரில் டெவான் கான்வே துவக்க வீரராகவும், சிவம் துபே இம்பாக்ட் வீரராகவும் இடம் பெற்ற பின் அவர்களால் சிஎஸ்கே அணி அதிரடியாக ரன் குவித்து வந்தது. டெவான் கான்வே இயல்பாகவே அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர். சிவம் துபே இம்பாக்ட் வீரர் என்பதால் அவரை அதிரடியாக ரன் குவிக்கும் படி தோனி கூறியதை அவர் அப்படியே செய்தார்.
அந்த இருவரின் ஆட்டத்தால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பல போட்டிகளில் அதிக ரன் ரேட்டில் ரன் குவித்து, வெற்றிகளையும் பெற்றது. தற்போது தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, கடந்த சீசனில் வெற்றிக்கு காரணமாக இருந்த அதிரடி பேட்டிங் உத்தியை கையில் எடுத்துள்ளது சிஎஸ்கே.
இதே உத்தியை மற்ற அணிகள் பல காலமாக பின்பற்றி வரும் நிலையில் சிஎஸ்கே அணி 120 ஸ்ட்ரைக் ரேட் என்ற இடத்தில் இருந்து நகரத் துவங்கி இருக்கிறது. 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 174 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது ருதுராஜ் கெய்க்வாட்டை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தனர்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் ரச்சின் ரவீந்திரா 246, அஜின்க்யா ரஹானே 142, டேரில் மிட்செல் 122, சிவம் துபே 122, ரவீந்திர ஜடேஜா 147. இதில் ரஹானே மற்றும் ரச்சின் சிக்ஸ் அடித்த உடன் தங்கள் விக்கெட்டை இழந்தனர். அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை செயல்படுத்தி இருந்ததை புரிந்து கொள்ளலாம்.
சிஎஸ்கே அணி அடுத்து ஆட உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதே போன்ற உத்தியை தான் பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.