சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக ஊடகம் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது சரியாக 7.38 மணிக்கு கோஷம் எழுப்ப முடிவு செய்துள்ளனர்.
2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து சிஎஸ்கே அணிக்கு ஐந்தாவது முறையாக கோப்பை பெற்றுக் கொடுத்தார்.

அவருக்கு நன்றி சொல்லும் விதமாக சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் கோஷம் எழுப்ப முடிவு செய்துள்ளனர். இன்று (செவ்வாய் கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. இந்தப் போட்டியின் போது தான் இந்த திட்டத்தை தீவிர சிஎஸ்கே ரசிகர்கள் செயல்படுத்த உள்ளனர்.
அதன் படி இந்தப் போட்டியில் 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசினாலும், பேட்டிங் செய்தாலும், சரியாக போட்டி தொடங்கி 8 நிமிடத்தில், இரவு 7.38 மணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று, "ஜட்டு, ஜட்டு" என கோஷமிட உள்ளனர்.
2023 ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே ரசிகர்களில் ஒரு பிரிவினர் ஜடேஜாவின் நிதான பேட்டிங்கை விமர்சித்து அவர் பேட்டிங் ஆடிய போதெல்லாம் அவருக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். மேலும், அப்போது தோனி பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதால் ஜடேஜா அவுட் ஆகி செல்ல வேண்டும் என்றும் கோஷமிட்டனர். ஆனால், அதே ஜடேஜா தான் 2023 ஐபிஎல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க உள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
2022 ஐபிஎல் தொடரின் போது ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின் 2023இல் தோனியே சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர்ந்தார். தற்போது 2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மூத்த வீரராக இருந்த போதும் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.