அகமதாபாத் : குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பலரும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில்லும் அடித்த சதங்களே காரணமாக அமைந்தது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும், சுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் சேர்த்தனர்.

சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் சுப்மன் கில்லை விடவும் சாய் சுதர்சனின் ஸ்ட்ரைக் ரேட்டே கூடுதலாக இருந்தது. ஆனால் சுப்மன் கில்லுக்கு விருது வழங்கி பாரபட்சம் காட்டப்பட்டது.
இது ஒருபக்கம் இருக்க, சதம் விளாசிய சுப்மன் கில், வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக கொண்டாடினார். அப்போது அவரது வாயில் இருந்து சில கெட்ட வார்த்தைகளும் வந்தன. இது சிஎஸ்கே அணியின் ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை. இதனால் சுப்மன் கில்லை சோசியல் மீடியாவில் பொளந்து கட்டி வருகின்றனர். இளம் வயதில் ஐபிஎல் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் சுப்மன் கில்லுக்கு திமிர் அதிகமாகிவிட்டதாக விமர்சித்து வருகின்றனர்.
அகமதாபாத் மைதானத்தில் மட்டும் ரன்கள் சேர்த்து வரும் சுப்மன் கில், மற்ற மைதானங்களில் பெயருக்கு கூட ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் சுப்மன் கில் மீது ஏற்கனவே "பிளாட் ட்ராக் புல்லி" என்று விமர்சனங்கள் இருந்து வருகின்றன. தற்போது சுப்மன் கில்லின் அடைமொழியான "பிரின்ஸ்" என்ற பெயரையும் சிஎஸ்கே ரசிகர்கள் அட்டாக் செய்து வருகின்றனர்.
சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் அல்ல, அகமதாபாத் மைதானத்தின் பிரின்ஸ் என்று கிண்டல் செய்து வருகின்றனர். ஏற்கனவே நடுவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சைகளில் சிக்கிய சுப்மன் கில், தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக கொண்டாடி கூடுதல் வெறுப்பை சம்பாதித்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.