மும்பை : ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி பரிசோதனை முயற்சியிலேயே கொண்டு வரப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதியின் காரணமாக ஒவ்வொரு அணியும் 12 வீரர்களுடன் களமிறங்க முடியும். அதாவது இரு அணிகளும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது கூடுதலாக ஒரு பவுலரையோ அணிக்குள் கொண்டு வர முடியும். இதனால் ஆல்ரவுண்டரிகளின் தேவை குறைந்தது.

குறிப்பாக சிவம் துபே, ராகுல் டிவாட்டியா, நிதிஷ் ராணா, திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் பவுலிங் செய்ய வேண்டிய தேவையே இல்லாமல் போனது. அதேபோல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட விக்கெட் பற்றி கவலையே இல்லாமல் பொளந்து கட்டி வருகின்றனர். இதனால் 250 ரன்கள் கூட சாதாரணமாக விளாசப்பட்டு வருகிறது.
அண்மையில் இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிரான குரல்கள் எழுந்து வருகின்றன. ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகேஷ் குமார், அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்கள் பலரும் இம்பேக்ட் பிளேயர் விதி தேவையில்லாதது என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இம்பேக்ட் பிளேயர் விதிமுறை பரிசோதனை முயற்சியிலேயே ஐபிஎல் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின் மூலமாக ஒவ்வொரு போட்டியிலும் 2 இந்திய வீரர்கள் வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த விதியின் காரணமாக ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுவதும் கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவோம்.
இதனால் இம்பேக்ட் பிளேயர் விதியை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாகவும் நிச்சயம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடம் பரிந்துரைகள் கேட்போம். ஆனால் இந்த இம்பேக்ட் பிளேயர் விதி நிரந்தரமானது அல்ல. அதேபோல் இதுவரை இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.