சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டி எப்போது என்ற ஆர்வம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கப் போகிறது என்ற தகவல்களுக்கு மத்தியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதோடு, ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்து இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் ருதுராஜ் கெய்க்வாட். எப்போது தேவையோ அப்போது அனுபவ வீரர் தோனியின் ஆலோசனைகளை பெற்று செயல்படுத்தினார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், அடுத்த சிஎஸ்கே போட்டி வரும் செவ்வாய் (மார்ச் 26, 2024) அன்று நடைபெற உள்ளது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது சிஎஸ்கே அணி. குஜராத் டைட்டன்ஸ், தனது முதல் போட்டியில் ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது.
எனவே, இரண்டு வலுவான அணிகளுக்கு இடையிலான போட்டியாக இது இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்கும். டாஸ் நிகழ்வு 7 மணிக்கு நடைபெறும்.
சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் அணியில் எந்த மாற்றமும் செய்யாது என்றே கருதப்படுகிறது. பெங்களூரு போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வரவில்லை. எனவே, குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் அவர் பேட்டிங் செய்ய வருவாரா? என சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சிஎஸ்கே அணியின் உத்தேச பிளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே