சென்னை : ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியடைந்த போதும், சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் பாசிட்டிவாக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக சிஎஸ்கே அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் 12 புள்ளிகளோடு இருக்கும் டெல்லி அணி 5வது இடத்திலும், லக்னோ அணி 6வது இடத்திலும் இருக்கின்றன.

டெல்லி மற்றும் லக்னோ அணிகளை விடவும் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதற்கும், டாப் 4ல் தொடர்வதற்கும் நெட் ரன் ரேட் மட்டுமே காரணமாக அமைந்துள்ளது. சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் தோல்வியடைந்த போது, நெட் ரன் ரேட் +0.419ஆக உள்ளது. இது 3வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணியை விடவும் அதிகமாகும்.
ஆனால் டெல்லி அணியின் நெட் ரன் ரேட் -0.316 ஆகவும், லக்னோ அணியின் நெட் ரன் ரேட் -0.769ஆகவும் உள்ளது. சிஎஸ்கே அணி தோல்வியடைந்த போட்டிகளிலும் கவுரவமாக தோல்வியடைந்ததே, தற்போது நெட் ரன் ரேட் கவுரவமாக இருப்பதற்கு காரணம். அதேபோல் சிஎஸ்கே அணியின் தோல்வி நிச்சயம் என்ற போதும், தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதும் தற்போது உதவியாக அமைந்துள்ளது.
ஏனென்றால் குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்த போதும், வித்தியாசத்தை குறைத்தது தோனியின் இன்னிங்ஸ் தான். தொடக்க சீசன்களில் இருந்தே சிஎஸ்கே போன்ற அணிகள் நெட் ரன் ரேட் மீது எப்போதும் கவனத்தை வைத்திருக்கும். அதிலும் தோனி எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பவர்.
தற்போது கடைசி நேரத்தில் தோனி களமிறங்கி சில இன்னிங்ஸ்களில் பொளந்து கட்டியதால், சிஎஸ்கே அணி தோல்வியடைந்த போட்டிகளிலும் வித்தியாசம் மிகக் குறைவாக மாறியது. நேற்றைய ஆட்டத்தில் கூட சுப்மன் கில், 15 ரன்கள் கூடுதல் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதனை முன்பே சிந்தித்து தோனி செயல்பட்டதால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பு தற்போதும் பிரகாசமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.