சென்னை : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே ஆடிய ஆட்டத்தை பார்த்து எழுந்து நின்று கை தட்டினார் தோனி. பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இடம் பெற்று வந்தாலும் சரியாக ஆட முடியாமல் திணறி வந்த சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பின் வேறு ஒரு வீரராகவே மாறி விட்டார். அதற்கு தோனி தான் காரணம் என அவரே பல முறை பேசி இருக்கிறார்.
இந்த நிலையில், தன் சிஷ்யன் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததை பார்த்து மகிழ்ச்சியில் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினார் தோனி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடி ஆட்டம் ஆடி 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். அவர் சென்ற பின் ரன் ரேட் குறைந்தது. ரஹானே 12 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆட மற்றவர்கள் அதிரடி ஆட்டம் ஆடுவது என்பதே சிஎஸ்கே அணியின் திட்டமாக இருந்தது. அதன்படி ரஹானேவுக்கு பின் களமிறங்கிய சிவம் துபே முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தன் இன்னிங்ஸை துவக்கினார். அதன் பின் 5 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார் அவர். 22 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அதன் பின்னும் ஒரு பந்தையும் வீணடிக்க நினைக்காமல் அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால், கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 23 பந்துகளில் 51 ரன்கள் அடித்து இருந்தார்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்பிளே ஓவர்களில் இரண்டு துவக்க வீரர்களையும் இழந்தது. அதன் பின் ரன் ரேட்டை அதிகரிக்க முடியாமல் தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.