சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தான் ஆடிய இரண்டே போட்டிகளில் தன் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்களை ஈர்த்தார். அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது சிஎஸ்கே ரசிகர்கள், "ரச்சின், ரச்சின்" என கோஷம் எழுப்பினர்.
சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகளிலும் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன் குவித்திருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவீந்திரா 3 சிக்ஸ் அடித்தார். அவர் ஒவ்வொரு சிக்ஸராக அடிக்க, அடிக்க சிஎஸ்கே ரசிகர்கள், "ரச்சின், ரச்சின்" என கோஷம் எழுப்பத் துவங்கினர்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா துவக்க வீரர்களாக களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆட, ரச்சின் ரவீந்திரா முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை துவக்கினார். 27 பந்துகளில் எல்லாம் சிஎஸ்கே அணி 50 ரன்களை கடந்தது. 20 பந்துகளில் 6 ஃபோர், 3 சிக்ஸ் அடித்த ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடி இருக்கும் ரச்சின் ரவீந்திரா அதற்குள் சிஎஸ்கே ரசிகர்களின் இதயத்தை வென்று விட்டார்.
அதன் பின் ரஹானே 12, ருதுராஜ் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிவம் துபே 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். சமீர் ரிஸ்வி 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. ரச்சின் ஆடிய அதிரடி ஆட்டம் காரணமாகவே சிஎஸ்கே அணி எளிதாக 200 ரன்களை கடக்க முடிந்தது. அவருக்கு பின் சிவம் துபே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்ததும் 200 ரன்களை கடக்க காரணமாக இருந்தது.
அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.