அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனிக்கு அளிக்கப்பட்ட விருதை கேப்டன் ருதுராஜ் வாங்கி சென்றது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 232 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக டேரல் மிட்சல் 34 பந்துகளில் 63 ரன்களையும், மொயின் அலி 36 பந்துகளில் 56 ரன்களையும் சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் வந்த தோனி, நெட் ரன் ரேட்டை மனதில் வைத்து 11 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்களை சேர்த்தார். அதிலும் ரஷீத் கான் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை தோனி விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை அளித்தது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ரன் ரேட் +491 என்ற நிலையில் உள்ளது.
அடுத்ததாக சிஎஸ்கே அணி விளையாட உள்ள ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்றாலே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் நிலை உருவாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புக்கு வந்த முதல் சீசனிலேயே, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ருதுராஜ் கெய்க்வாடை முன்னிறுத்தி வருகிறார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்ததற்காக எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருது தோனிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்க தோனி வரவில்லை.
அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வாங்கி கொண்டார். அப்போது வர்ணனையில் இருந்த ஹர்ஷா போக்லே, தோனியின் இடத்தில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அந்த விருதை பெறுகிறார். தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியிலும் தோனி இடத்தில் ருதுராஜ் இருக்கிறார் என்று சொல்ல, அகமதாபாத் மைதான ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.