அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும், சுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் சேர்த்தனர். ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதற்கு முன் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் சேர்த்ததே அவரின் சிறந்த இன்னிங்ஸாக இருந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் முரளி விஜய் மட்டுமே சதம் விளாசி இருந்தார். அவருக்கு பின் சதம் விளாசிய 2வது தமிழக வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதுவரை 25 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன், ஒரேயொரு முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். அதேபோல் இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்திருந்த போது சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார். இதற்கு 31 இன்னிங்ஸ்களில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆயிரம் ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இவர்களின் சாதனையை முறியடித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடத்திற்கு சென்றுள்ளார்.
அதேபோல் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மிட்சல் மார்ஷ் 21 இன்னிங்ஸ்களில் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதன்பின் சிம்மன்ஸ் 23 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எடுத்து 2வது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு பின் சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எடுத்து மேத்யூ ஹெய்டனுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.