சென்னை : சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருப்பதை நினைத்தால், சில நேரங்களில் எரிச்சலாக இருக்கும் என்று நட்சத்திர வீரர் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தார் மிட்சல் சான்ட்னர். பவர் பிளேவிலேயே 2 ஓவர்களை வீசிய சான்ட்னர், பஞ்சாப் அணியின் ரன் ரேட்டை அப்படியே நிறுத்தினார். இந்த போட்டியில் மொத்தமாக 3 ஓவர்களை வீசிய சான்ட்னர் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதன் மூலமாக சான்ட்னரை சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 2018ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் மிட்சல் சான்ட்னர், இதுவரை மொத்தமாக 16 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் மொத்தமாக 67 ரன்கள் சேர்த்து 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் தளபதி ஜடேஜாவுக்கு மாற்று வீரராக மட்டுமே சான்ட்னர் பார்க்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே சான்ட்னருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சான்ட்னர் பேசுகையில், சிஎஸ்கே அணிக்காக அனைத்து நேரங்களிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருப்பது சோகத்தை அளிக்கிறது.
சில நேரங்களில் பெஞ்சில் இருப்பதே எரிச்சலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து விளையாடாமல் இருக்கும் போது கவனத்தை குவிப்பதே கடினமாக இருக்கும். அதனால் அந்த நேரத்தில் மற்ற இளம் வீரர்களுக்கு உதவி செய்வேன். பயிற்சியாக இருந்தாலும், போட்டியாக இருந்தாலும் சக வீரர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிஎஸ்கே அணியில் முஸ்தஃபிசுர் ரஹ்மான், பதிரானா உள்ளிட்டோர் விலகியுள்ள நிலையில், சான்ட்னருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி மீண்டும் பழையபடி ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்ய முடிவு செய்துள்ளதால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நிச்சயம் சான்ட்னர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.