அகமதாபாத் : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 6 சிக்ஸ், 9 பவுண்டரிகளை விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனான பின் சுப்மன் கில் பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையில், அகமதாபாத் பிட்சில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் விளாசி ஃபார்முக்கு வந்துள்ளார். இதன் மூலம் குஜராத் அணியின் பிளே ஆஃப் கனவும் தக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், ஃபீல்டிங்கின் போது ஓய்வில் இருந்ததற்கு காலில் ஏற்பட்ட பிடிப்பு தான் காரணம். நீங்கள் நினைப்பது போல் எந்த காயமும் ஏற்படவில்லை. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஆதரவாக இருந்தனர். அப்படியிருக்கும் போது, நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது என்ன இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவே இல்லை.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். எனக்கும் சாய் சுதர்சனுக்கும் நல்ல புரிதல் உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நாங்கள் இருவருமே அதிகமாக இணைந்து விளையாடினோம். அவருடன் பேட்டிங் விளையாடுவது உற்சாகமாக உள்ளது. குஜராத் அணிக்கு இதுதான் சிறந்த தொடக்கம் என்று நினைக்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக மோகித் சர்மா குஜராத் அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். எல்லோருக்கும் சில போட்டிகள் மோசமாக அமையும். இன்று மோகித் சர்மாவின் பவுலிங் சிறப்பாக இருந்தது. இந்த இன்னிங்ஸின் போது ஒரு கட்டத்தில் 250 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளதை உணர்ந்தோம். ஆனால் கடைசி 2 முதல் 3 ஓவர்கள் சிஎஸ்கே அணி நன்றாக பவுலிங் செய்தனர். அப்போது 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைத்தோம். குறைவு என்று சொன்னதற்கு காரணம் நெட் ரன் ரேட்டிற்காக தான் என்று தெரிவித்துள்ளார்.