சென்னை : எம்எஸ் தோனியுடன் இணைந்து பேட்டிங் செய்து ஆட்டத்தை முடித்தது பல சம்பவங்களை நினைவுபடுத்துவதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. சிஎஸ்கே அணி தரப்பில் ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.

அதேபோல் சிவம் துபே 28 ரன்களையும், டேரல் மிட்சல் 25 ரன்களையும் விளாசினர். அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது. இதன் மூலமாக 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் முன்னாள் கேப்டன் தோனி, கேப்டன் ருதுராஜ் இருவரும் இணைந்து ஆட்டத்தை முடித்தனர்.
சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அடிக்கும் முதல் அரைசதம் இது. இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜியா தான். ஏனென்றால் எனது முதல் ஐபிஎல் அரைசதத்தின் போது தோனியும் நானும் இணைந்து ஆட்டத்தை முடித்தோம். அதேபோல் கேப்டனாக முதல் அரைசதம் அடித்த போதும் நானும் அவரும் இணைந்து போட்டியை முடித்துள்ளோம். ரஹானே காயமடைந்ததால், கடைசி வரை களத்தில் நிற்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
இளம் வீரர்களை இந்த சூழலில் தள்ள விரும்பவில்லை. இந்த பிட்ச் 150 முதல் 160 ரன்கள் அடிக்க கூடியது என்றே நினைக்கிறேன். ஜடேஜாவை பவர் பிளே முடிவடைந்ததும் எப்போதும் பவுலிங் செய்ய கொண்டு வருவோம். அதனை தான் இன்றும் செய்தோம். சிஎஸ்கே அணியில் உள்ள யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல தேவையில்லை. அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார்கள்.
தோனி மற்றும் ஃபிளெமிங் இருவரும் முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நான் ஸ்லோவாக தொடங்கினேன் என்று நினைக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் சில போட்டிகளில் ஆட்டம் மாறிவிடும். சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு தேவையாக இருக்கும். அதேபோல் எனது ஸ்ட்ரைக் ரேட் பற்றி விவாதங்கள் எழலாம் என்று தெரிவித்துள்ளார்.