சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே பந்துவீச்சு தான்.
அதிரடி ஆட்டம் ஆடுவதில் தேர்ந்த கொல்கத்தா அணியை 20 ஓவர்களில் வெறும் 137 ரன்களுக்குள் சுருக்கியது சிஎஸ்கே அணியின் பவுலிங் படை. சிஎஸ்கே அணியின் இந்த அபாரமான செயல்பாட்டுக்கு மூத்த வீரர் தோனியோ, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டோ காரணம் இல்லை. மாறாக சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் டிவைன் பிராவோ தான் கொல்கத்தா அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கான திட்டத்தை போட்டுக் கொடுத்து இருக்கிறார்.

அதை குறிக்கும் வகையிலேயே துஷார் தேஷ்பாண்டே மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்திய பின் பிராவோ போலவே விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடி அவருக்கு நன்றி கூறினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் பில் சால்ட் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். ஆனாலும், அதிரடி ஆட்டம் ஆடிய சுனில் நரைன் - ரகுவன்ஷி ஜோடி பவர் பிளேவில் 56 ரன்கள் சேர்த்தது.
அதன் பின் ரவீந்திர ஜடேஜா ஏழாவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார் ஜடேஜாஅதன் பின் துஷார் தேஷ்பாண்டே முக்கிய வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் விக்கெட்டை வீழ்த்தி மொத்தம் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். முஸ்தாபிசூர் ரஹ்மான் கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
ஜடேஜாவைத் தவிர மற்ற வேகப் பந்துவீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர் மற்றும் ஷர்துல் தாக்குர் மிக கட்டுக் கோப்பாக ரன் கொடுக்காமல் பந்து வீசியதோடு, விக்கெட்களையும் அள்ளினர். பிராவோவின் திட்டத்தை செயல்படுத்தும் வகையல் மிதமான வேகத்தில் பந்து வீசியதே அவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கு காரணம்.