சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற 138 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சிஎஸ்கே அணியின் பதிரானா மற்றும் தீபக் சஹர் காயம் காரணமாக விலகியதால், ஷர்துல் தாக்கூர் அணிக்குள் இணைந்தார்.

இதன்பின் கேகேஆர் அணி சார்பாக பில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் டக் அவுட்டாகி வெளியெற, உடனடியாக இளம் வீரர் ரகுவன்ஷி களமிறங்கினார். இருப்பினும் துஷார் தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில் சுனில் நரைன் 19 ரன்கள் விளாசி பரபரப்பை எகிறி வைத்தார்.
தொடர்ந்து ரகுவன்ஷியும் அதிரடியாக பவுண்டரிகளை விளாச, கேகேஆர் அணியின் ஸ்கோர் 6 ஓவர்களிலேயே 56 ரன்களை எட்டியது. இதன்பின் உடனடியாக ஜடேஜா அட்டாக்கில் வந்தார். ஜடேஜாவை அட்டாக் செய்ய நினைத்து முதல் பந்திலேயே ரகுவன்ஷி ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த முயன்று ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரின் 5வது பந்திலேயே சுனில் நரைன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கேகேஆர் அணி 61 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கைகள் ஓங்கியது. தொடர்ந்து ஜடேஜாவின் சுழலில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் வெளியேற, ரச்சின் ரவீந்திராவையும் சிஎஸ்கே அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. இதனால் கேகேஆர் அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய முடியாமல் திணறினர். பின்னர் தீக்சனா பந்தில் அதிரடியாக விளையாட முயன்ற ரமன்தீப் சிங் 13 ரன்களில் வெளியேற, கேகேஆர் அணி 15 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 14 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் அதிரடி வீரர் ரஸ்ஸல் இணைந்தார். சில பவுண்டரிகளை விளாசிய ரஸ்ஸல், துஷார் தேஷ்பாண்டே பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் சேர்க்கப்பட, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 2 ரன்களை மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. சிறப்பாக பவுலிங் செய்த ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.