சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணியின் சரிவுக்கு ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் முக்கியமான காரணமாக இருந்தனர்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்து வென்றது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த சிவம் துபே 18 பந்துகளில் 3 சிக்ஸ் உட்பட 28 ரன்களை சேர்த்தார். அதேபோல் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக தோனியின் களமிறங்கி 3 பந்துகளில் ஒரு ரன்கள் சேர்த்தார்.
முன்னாள் கேப்டனான தோனியும், தற்போதைய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்-ம் இணைந்து வென்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த சீசனில் தோனி முதல்முறையாக சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் முன்னிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். கடந்த சீசனிலேயே ரசிகர்களின் அன்புக்காக ஒரு சீசனில் விளையாடுவேன் என்று கூறி இருந்தார்.
அதேபோல் சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் ரசிகர்களுக்காக தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினார். அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கு பின் கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரை கட்டிப்பிடித்து தோனி நட்பு பாராட்டினார். இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையை வென்றனர்.
இருப்பினும் கம்பீரின் சில சர்ச்சையான கருத்துகளால், சிஎஸ்கே - கேகேஆர் அணி ரசிகர்களிடையே காரசாரமான வாக்குவாதம் இருந்து வந்தது. அத்தனையையும் மறந்து சமீப நாட்களாக கம்பீர் தோனியை பாராட்டி வருவதும், அவரை நேரில் சந்தித்து உரையாடுவதும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆர்சிபி அணியுடனான போட்டியின் போது கோலியுடன் கம்பீர் நட்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.