சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி விக்கெட் கீப்பராக ஒரு தவறு செய்தார். அதை எதிர்பார்க்காத சிஎஸ்கே ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். அதுவரை இருந்த சிஎஸ்கே ரசிகர்களின் கோஷம் அப்படியே அடங்கியது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் பில் சால்ட், சுனில் நரைன், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல் என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்த போதும் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.

இந்த நிலையில் 18வது ஓவரில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்து வீசினார். அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங் செய்து வந்தார். அப்போது ரஸ்ஸல் பேட்டில் எட்ஜ் ஆகி பந்து பின்னே சென்றது. தோனியின் வலது புறம் பந்து சென்றது. தோனி பந்தை கேட்ச் பிடிக்க பாய்ந்தார். ஆனால், பந்தை தவற விட்டார். தோனி இதுபோன்ற தவறுகளை அதிகம் செய்தது இல்லை என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். சில வினாடிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மயான அமைதி நிலவியது.
கடைசி இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கேட்சை நழுவ விட்டது பெரிய தவறாக பார்க்கப்பட்டது. எனினும், ரஸ்ஸல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து தோனி செய்த தவறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. "தோனி அணிந்து இருந்த கிளவுஸ் சரியில்லை. அதனால் தான் அவரால் கேட்ச்சை பிடிக்க முடியவில்லை" என சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் அடுத்து சேஸிங் செய்த சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. கேப்டன் ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 67 ரன்கள் அடித்து சேஸிங்கை முடித்து வைத்தார்.