சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் தன் அதிரடி ஆட்டத்தை ஆடிய நிலையில், ஜடேஜாவை அழைத்து அவர் விக்கெட்டை வீழ்த்த காரணமாக இருந்தார் தோனி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். அவரது முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் துவக்க வீரர் பில் சால்ட்.

அதை அடுத்து முதல் இரண்டு ஓவர்களுக்கு கொல்கத்தா அணியின் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரைன் அடக்கி வாசித்தார். பின்னர் மூன்றாவது ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். அதைத் தவிர்த்து லெக் பை மூலம் ஒரு ஃபோர் கிடைத்தது. கொல்கத்தா அணி அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து சுனில் நரைன் மற்றும் ரகுவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினர். பவர் பிளே ஓவர்களில் கொல்கத்தா அணி 56 ரன்கள் குவித்தது. இதை அடுத்து விக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி. அப்போது இடைவேளை வந்தது.
அப்போது 7வது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவை பந்து வீச வைக்க முடிவு செய்யப்பட்டது. ரகுவன்ஷி பேட்டிங் செய்ய தயாராக நின்றார். அதன் பின் ஜடேஜா லெக் திசையில் பந்து வீசினார். ரகுவன்ஷி பந்தை கணிக்க முடியாமல் தடுமாறி எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அதே போல சுனில் நரைன் ஆஃப் சைடில் வரும் பந்துகளை அடித்து ஆடிய நிலையில் ஆஃப்-சைடில் பந்து வீசுமாறு சைகை காட்டினார் தோனி. அதற்கு ஏற்ப ஃபீல்டிங்கை மாற்றினார் ஜடேஜா. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சுனில் நரைன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து போட்டி சிஎஸ்கே வசம் சென்றது.