சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சிக்ஸர் மன்னன் ரிங்கு சிங் பெட்டிப் பாம்பாக அடங்கினார். 14 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதை விட அவரால் சில பந்துகளை பேட்டால் தொடக் கூட முடியவில்லை. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு திட்டத்தை புரிந்து கொள்ள முடியாத கொல்கத்தா அணியின் அனைத்து அதிரடி பேட்ஸ்மேன்களும் ரிங்கு சிங்கை போலவே ரன் எடுக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

2024 ஐபிஎல் தொடரில் பல அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக தங்களை முன்னிறுத்திக் கொண்டு இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியிலும் 200 ரன்கள் அடிக்க காத்திருந்தது. போட்டிக்கு முன் சேப்பாக்கம் பிட்ச்சை பார்த்த முன்னாள் வீரர்கள் அனைவரும் எளிதாக 200 ரன்கள் அடிக்கலாம் என கூறினர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர் பில் சால்ட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் ரகுவன்ஷி சுனில் நரைன் அதிரடி ஆட்டம் ஆடினார்கள். அவர்க,அவர்களை ஜடேஜா ஒரே ஓவரில் வெளியேற்றினார். அதன் பின் வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஏழாம் வரிசையில் ரிங்கு சிங் களமிறங்கினார். அவர் தன் அதிரடியால் சில சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரால் பந்தை சரியாகக் கூட அடிக்க முடியவில்லை.
"சிக்ஸர் மன்னன்" ரிங்கு சிங் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் காட்டினார். 200 ரன்களை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.