சென்னை : சிஎஸ்கே அணியின் சிவம் துபே மற்றும் கேகேஆர் அணியின் சுனில் நரைன் இருவருக்கும் இடையிலான யுத்தமே வெற்றியை தீர்மானிக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கேகேஆர் அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளையும், சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கவுள்ளது. இது ருதுராஜ் கெய்க்வாட் vs ஸ்ரேயாஸ் ஐயர் என்பதை காட்டிலும், தோனி vs கம்பீர் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிஎஸ்கே அணியின் சிவம் துபே கேகேஆர் அணியின் ஸ்பின்னர்களுக்கு கடுமையான சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், கேகேஆர் அணியில் மீண்டும் சுனில் நரைன் மீதான கவனம் அதிகரித்துள்ளது. முதல் போட்டியை தவிர்த்து அடுத்த 2 போட்டிகளில் கேகேஆர் அணி வெற்றிபெறுவதற்கு சுனில் நரைன் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளார். அதனால் அவரை ரன்கள் சேர்க்க விடக்கூடாது என்ற கவனம் தீவிரமாக இருக்கும்.
இந்த போட்டியில் சுனில் நரைனுக்கு லெந்த் பந்துகளை விடவும், பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்துகளே அதிகமிருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சிஎஸ்கே அணி வீரர்கள் நரைனை விரைவாக வெளியேற்ற முயற்சிப்பார்கள். அதனால் சுனில் நரைன் மீது கொஞ்சம் அழுத்தம் இருக்கும். அதேபோல் சுனில் நரைன் பவுலிங்கை எதிர்கொள்ளவும் சிஎஸ்கே அணி தயாராக உள்ளது.
சிஎஸ்கே மிடில் ஆர்டரில் ரஹானே, மிட்சல் மற்றும் சிவம் துபே இருக்கிறார்கள். ஸ்பின்னர்களை வெளுத்து கட்டும் சிவம் துபேவால் சுனில் நரைனின் பந்துகளில் விளாச முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் ரஸ்ஸல் நிச்சயம் பவுலிங் செய்ய வருவார். அதனால் சிஎஸ்கே அணி அவரை எதிர்கொள்ளவும் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் பேட்டிங்கிலும் ரஸ்ஸலுக்கு சிஎஸ்கே அணி அழுத்தம் கொடுக்க காத்திருக்கும். நரைன் ரன்கள் சேர்க்காத போது, ரஸ்ஸல் ரன்கள் சேர்க்க வேண்டிய தேவை அதிகமாகும். மேலும் இந்த போட்டியில் ஹர்சித் ராணா விளையாடுவாரா என்பது தெரியவில்லை. அதேபோல் இன்றைய ஆட்டத்தில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.