சென்னை : கேகேஆர் அணியில் நட்சத்திர தொடக்க வீரர் பில் சால்டை முதல் பந்திலேயே வீழ்த்தி சிஎஸ்கே அணியின் துஷார் தேஷ்பாண்டே அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது. இந்த சீசனில் கேகேஆர் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர்களான பதிரானா, தீபக் சஹர் காயம் காரணமாக விலகியதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் பவர் பிளே ஓவர்களில் தீபக் சஹரும், டெத் ஓவர்களை பதிரானாவுமே வீசி வந்தனர். இதனால் இவர்களின் இடத்தை யார் வைத்து சிஎஸ்கே அணி நிரப்பும் என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் சிஎஸ்கே அணியில் அனுபவ வீரர் ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட்டார்.
இந்த நிலையில் முதல் ஓவரை வீச துஷார் தேஷ்பாண்டே அழைக்கப்பட்டார். முதல் போட்டியை தவிர்த்து கடந்த 3 போட்டிகளிலும் துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பவுலிங் செய்தாலும், முதல் ஓவரில் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பின் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். கேகேஆர் அணி ஆடிய கடந்த 2 போட்டிகளிலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்ததால், என்ன நடக்கும் என்ற பதற்றத்துடன் சிஎஸ்கே ரசிகர்கள் இருந்தனர்.
இதன்பின் துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. அதேபோல் முதல் ஓவரில் வெறும் ஒரு ரன்னை மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், சில வாரங்களுக்கு முன் ஷர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் இணைந்து மும்பை அணிக்கு ரஞ்சி கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.