சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டு, நம்பர் 3ல் டேரல் மிட்சல் களமிறங்கியது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 138 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திரா - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் 2 ஓவர்கள் இருவரும் நிதானம் காட்டிய நிலையில், ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி ரச்சின் ரவீந்திரா மிரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்பின் ரஹானே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீரென டேரல் மிட்சல் களம் புகுந்தார். இந்த சீசனில் நம்பர் 3ல் ரஹானே சிறப்பாக விளையாடிய நிலையில், சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதனால் ஃபார்மில் இல்லாத டேரல் மிட்சலை ஃபார்முக்கு கொண்டு வருவதற்காகவே பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டதாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து ருதுராஜ் - மிட்சல் இருவரும் இணைந்து 6 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் சேர்த்திருந்தனர். இதன்பின் கேகேஆர் அணியின் சுனில் நரைன் அட்டாக்கில் வந்தார். சுனில் நரைன் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்கள் விளாசப்பட்டது. குறிப்பாக சுனில் நரைன் வீசிய கடைசி பந்தில் மிட்சல் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பவுண்டரி அடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் மூலம் மிட்சலை ஃபார்முக்கு கொண்டு வர வேண்டும் என்பதை விடவும், அபாயகரமான பவுலரான சுனில் நரைனை அட்டாக் செய்ய வேண்டும் என்பதற்காகவே களமிறக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஃபீல்டிங்கின் போது ரஹானே தசை பிடிப்பு காரணமாக ஓய்வறைக்கு சென்றார். இதன் காரணமாக மாற்று ஃபீல்டரே களத்தில் இருந்தார்.
நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்யாததால், ரஹானே நம்பர் 5க்கு கீழ் பேட்டிங் செய்ய வரவே வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே நட்சத்திர வீரர்களான பதிரானா, தீபக் சஹர் உள்ளிட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றனர். தற்போது ரஹானேவும் காயத்தால் பேட்டிங் செய்ய களமிறங்காதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.