சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஏழு போட்டிகளில் ஆடி முடித்துள்ளது. அடுத்து தனது எட்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது. இதற்கு முந்தைய போட்டியிலும் லக்னோ அணியுடன் ஆடி இருந்தது சிஎஸ்கே அணி. அந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தது.
தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ள லீக் போட்டியில் சிஎஸ்கே அணி, மீண்டும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்தப் போட்டி ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இதற்கு முந்தைய போட்டியில் லக்னோ அணி, சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை தங்களின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் ஆடி தலா 4 வெற்றிகளை பெற்றுள்ளன. இரண்டு அணிகளுமே தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி (நெட் ரன் ரேட் - 0.529), லக்னோ அணியை முந்தி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 0.123 என்ற நெட் ரன் ரேட் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே - லக்னோ அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி மற்ற அணியை விட ஒரு படி மேலே முன்னேறி பிளே-ஆஃப் சுற்றுக்கான தன் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம். அதனால், இரு அணிகளுக்குமே அடுத்த வரும் போட்டி முக்கியமான போட்டியாக மாறி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இது வரை சென்னை சேப்பாக்கத்தில் மூன்று போட்டிகளில் ஆடி உள்ளது. அந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், மற்ற மைதானங்களில் நான்கு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தை நம்பியே இருப்பது தெரிகிறது. அந்த வகையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி மிகவும் அவசியம் ஆகிறது.