லக்னோ : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் பிளெமிங் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும், மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. வெளி மாநிலங்களில் விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

இதனால் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய அவசியத்துடன் களமிறங்குகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும், பவுலிங்கில் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியே களமிறங்குகிறது. பதிரானா, முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் அசத்தலாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.
அதேபோல் ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளரும் வெவ்வேறு ஸ்டைலில் வீசுவதால் எதிரணிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில், தீபக் சஹருக்கு பெரிய காயம் இல்லை. அதனால் கவலைப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாக காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.
மும்பை அணிக்கு எதிராக ஷர்துல் தாக்கூர் நன்றாக பவுலிங் செய்ததால், தீபக் சஹர் வருகைக்கு அவசரம் காட்டவில்லை. லக்னோ அணியை நாங்கள் சாதாரணமாக கருதவில்லை. நிச்சயம் லக்னோ அணி சிறந்த அணி தான். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செய்யும் விஷயங்களை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த விரும்புகிறோம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இன்னும் முன்னேற வேண்டிய தேவை உள்ளது.
நாங்கள் சில விஷயங்கள் சரியாக இருக்கிறோம் என்று நம்பவில்லை. அப்படி நம்பினால் நிச்சயம் அதில் பிரச்சனை வரும். அதனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளில் கூடுதல் முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. லக்னோ அணிக்கு எதிராக சவாலாக போட்டியாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.