சென்னை : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 16வது ஓவரை ஷர்துல் தாக்குரிடம் கொடுத்தது தான் என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவில் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும் என்பதால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதால் லக்னோ அணி முதலில் பந்து வீசியது. அதன் மூலம் சிஎஸ்கே அணி இரண்டாவது பாதியில் பந்துவீச்சின் போது கவனமாக இருக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி 210 ரன்கள் குவித்து வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் பந்துவீச்சை தொடங்கியது. முதல் 15 ஓவர்கள் வரை போட்டி சிஎஸ்கே வசம் இருந்தது. ஆனால், லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டும் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். அவருடன் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் சேர்ந்த நிலையில் 16வது ஓவரை வீச ஷர்துல் தாக்குரை அழைத்தார் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
அப்போது பதிரானா மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோருக்கு தலா இரண்டு ஓவர்கள் மீதமிருந்தன. அவர்கள் கடைசி நான்கு ஓவர்கள் வீச வேண்டும் என்பதால் 16வது ஓவரை வேறு யாராவது வீச வேண்டிய நிலை. அப்போது வேகப் பந்துவீச்சாளர்களில் தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோருக்கும் இரண்டு ஓவர்கள் மீதமிருந்தன.
அதில் தீபக் சாஹர் இரண்டு ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால் அவரை விடுத்து ஏற்கனவே ரன்களை வாரிக் கொடுத்திருந்த ஷர்துல் தாக்குருக்கு ஓவரை அளித்தார் ருதுராஜ். அந்த 16 வது ஓவரில் 20 ரன்கள் எடுத்தது லக்னோ அணி.
இதை அடுத்து 5 ஓவர்களில் 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்து 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது போட்டி. இதை அடுத்து நம்பிக்கை பெற்ற மார்கஸ் ஸ்டோனிஸ் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி தன் அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு வேளை அந்த 16வது ஓவரில் 10 ரன்களை குறைவாக கொடுத்திருந்தால் போட்டி சிஎஸ்கே வசம் இருந்திருக்கும். அந்த வகையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பெரிய தவறை செய்து விட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.