லக்னோ : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானமாக கருதப்படும் லக்னோ ஏகானா மைதானத்தில் 45,000 ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.
அதில் பெரும்பான்மையான அளவில் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற உடை அணிந்த ரசிகர்களே இருந்தனர். அதிலும் தோனி பேட்டிங் செய்ய வந்த போது அந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் போல மாறியது லக்னோ. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 176 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய லக்னோ அணி 19.ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல், "இந்தப் போட்டியில் பாதி அளவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பந்துவீச்சாளர்கள் பக்கம் வந்து விட்டது. மேலும், தோனி வந்த போது ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால் எங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளானார்கள்." என்றார்.
மேலும், சிஎஸ்கே அணி அதிக ரன்கள் குவித்தது மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் பற்றி பேசுகையில், "தோனி எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறார். அதனால், சிஎஸ்கே அணி 15 - 20 ரன்கள் கூடுதலாக எடுத்தது. அடுத்து நாங்கள் சென்னையில் ஆட இருக்கிறோம். ஆனால், இங்கேயே ஒரு சிறிய சென்னை மைதானத்தில் தான் ஆடி வென்று இருக்கிறோம். என் வீரர்களிடம் இதற்கு பழகிக் கொள்ளுமாறு கூறினேன். அடுத்து சென்னையில் ஆடும் போது இது எங்களுக்கு உதவும்" என்றார் கே எல் ராகுல்.