லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் செய்த செயலால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ தண்டனை அளித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் கடைசி இரண்டு ஓவர்களில் தோனி அதிரடி ஆட்டம் ஆடியதால் பதறிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது.

இதை அடுத்து விதிப்படி 20வது ஓவரில் உலகக்கோப்பை வட்டத்துக்கு வெளியே நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே நின்றனர். அது மட்டுமின்றி ஐபிஎல்-இல் எந்த அணி ஓவரை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது.
அடுத்து லக்னோ அணியின் பேட்டிங்கின் போது கே எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கினார். அவர் 62 ரன்கள் குவித்த நிலையில், பல முறை அவர் நேரத்தை வீணடித்தார். அதனால் சிஎஸ்கே அணிக்கும் ஓவரை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவில்லை என அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த தோனி, ருதுராஜ் கெய்க்வாட்டை அழைத்து அது குறித்து எச்சரித்தார்.
உடனே கே எல் ராகுல் நேரத்தை வீணடிப்பதை அம்பயரிடம் முறையிட்டார் எனினும், அம்பயர் கண்டு கொள்ளவில்லை. இதை அடுத்து போட்டியின் முடிவில் சிஎஸ்கே அணியும் ஓவர்களை வீசி முடிக்க கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.