சென்னை : 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது பால்கனி அறை கொடுக்கவில்லை என்று கூறி சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து விலகிய சர்ச்சை குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இங்கு செல்வதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 15 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு அணியினருடன் பயணம் மேற்கொண்டார்.

ஆனால் திடீரென ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சொந்த ஊர் திரும்பினார். இதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவிற்கு பால்கனி அறை கொடுக்காததே காரணம் என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சிஎஸ்கே வீரர்கள் யாரும் இதுவரை பொதுவெளியில் பேசியதில்லை. இதன்பின் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியால் வாங்கப்படவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் பால்கனி சர்ச்சை உண்மையென்றே கருதி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா பேசுகையில், 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது எனது உறவினர்கள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள். பாதான்கோட்டில் உறவினரின் மொத்த குடும்பமும் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டனர். இதனால் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறினேன். குடும்பத்தினரே முக்கியம் என்பதால், நான் உடனடியாக திரும்பினேன். அதன்பின் 2021ஆம் ஆண்டு சீசனில் அனைவரும் இணைந்து விளையாடி கோப்பையை வென்றோம். நான் மீண்டும் சிஎஸ்கே அணியுடன் இணைய முடியாமல் போனது.
ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடன் இணைய வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 30 நாட்கள் ஹோட்டலில் தனியறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்காமல் இங்கு இருந்தேன். அதனை சிஎஸ்கே அணி நிர்வாகமும் புரிந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.