சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் ஜெர்சியுடன் சிஎஸ்கே அணி ரசிகர்கள் குவிந்திருக்க, ஒரு ஆளாய் அமர்ந்திருந்த லக்னோ அணி ரசிகர் டான்ஸ் ஆடிய சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.
கில்லி படத்தில் "இந்த மதுர.. முத்துப்பாண்டி கோட்டை" என்று பிரகாஷ் ராஜ் வசனம் பேசிக் கொண்டே இருப்பார். அதுபோல் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டை என்று அடித்து சொல்லலாம். சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்துவது என்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அண்மையில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய எம்சிஜி மைதான ரசிகர்களால் கூட, சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் முன் தாக்கு பிடிக்க முடியாது என்று ஆஸி. வீரர் மிட்சல் ஸ்டார்க் கூறியிருந்தார்.

தோனி களமிறங்கும் நொடி மட்டுமல்லாமல் ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கு சிஎஸ்கே ரசிகர்களின் கோஷம் விண்ணை எட்டிவிடும். 35 ஆயிரம் ரசிகர்களும் மஞ்சள் ஜெர்சியை அணிந்துகொண்டு கொடுக்கும் கரகோஷத்தால், எதிரணி வீரர்கள் காதை மூடிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறி வருகின்றன. அந்த அளவிற்கு சிஎஸ்கே அணி மீது அன்பையும் பொழிந்து வருகின்றனர். இது எதிரணியினருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருக்க, லக்னோ ரசிகர்கள் ஒருவரின் செயல் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் சிக்சரை விளாசினார். தொடர்ந்து 2வது பந்தில் பவுண்டரி விளாச, சேப்பாக்கம் மைதானமே ஸ்தம்பித்து நின்றது.
அப்போது ஆயிரக்கணக்கான மஞ்சள் ஜெர்சிக்கு நடுவில் இருந்த லக்னோ ரசிகர், ஒற்றை ஆளாக துள்ளிக்குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதனை அருகில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் சிரித்து கொண்டே பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சரியாக கேமரா மேன் லக்னோ ரசிகரின் கொண்டாட்டத்தை ஜூம் செய்ய, சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த சீசனில் ஆர்சிபி அணியின் பெண் ரசிகர் ஒருவர் மைதானத்தில் கதறி அழுதது, மும்பை அணியின் ஹிட்மேன் ரசிகர் உடல் முழுக்க நீல நிற பெயிண்ட் அடித்து போட்டியை பார்க்க வந்த போது, ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அந்த ரசிகர்கள் கொடுத்த ரியாக்சன் ட்ரெண்டாகியது. தற்போது லக்னோ அணியின் ரசிகர் கொண்டாடிய சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.