சென்னை : ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்த 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சச்சின் டெண்டுல்கர் சதமடிக்கும் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. டேட்டாவை வைத்து பார்க்கும் போது இது தேவையற்ற விமர்சனமாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அதிர்ஷ்டம் இல்லை என்று பார்க்கப்பட்டது. அப்படியான ராசி விராட் கோலியை சில ஆண்டுகள் ஆட்டிப்படைத்து வந்தது.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சதமடித்தால் அந்த போட்டியில் ஆர்சிபி தோல்வி அடையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்தாலும் சென்னை அணியின் தோல்வி நிச்சயம் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்தும் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.
இதற்கு முன்பாகவும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 103 ரன்களை விளாசினார்.
ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த முதல் சதம் இதுவாகும். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெறும் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 50 ரன்களையும், சிவம் துபே 42 பந்துகளில் 64 ரன்களையும் விளாசினர்.
ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்த முதல் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த சூழலில், தற்போது 2வது சதமடித்த போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்காக வேறு எந்த வீரர் சார்பாக சதமடிக்கப்பட்ட போட்டியிலும், சென்னை அணி தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.