சென்னை : சிஎஸ்கே அணியின் ஒரு பவுலர்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று முன் தீர்மானத்துடன் களமிறங்கியதாக லக்னோ அணியின் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தார் ஸ்டாய்னிஸ். சிறப்பாக விளையாடிய ஸ்டாய்னிஸ், 63 பந்துகளில் 6 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் உட்பட 124 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் ஆட்டநாயகன் விருதையும் ஸ்டாய்னிஸ் தட்டிச் சென்றார்.

வழக்கமாக தீபக் ஹூடா முன் வரிசையில் களமிறங்கி வந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி சூழலின் முக்கியத்துவத்தை கருதி ஸ்டாய்னிஸை களமிறக்கியது. அதுவே லக்னோ அணியின் வெற்றிக்கும் காரணமாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் நட்சத்திர வீரர் ஸ்டாய்னிஸ் பேசுகையில், லக்னோ அணியில் என்னை விடவும் ஏராளமான தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் தொடக்க வீரருக்கான இடத்தை அவர்களிடம் விட்டுவிடுகிறேன்.
இந்த இன்னிங்ஸில் அனைத்து பவுலர்களையும் அடிக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. சில பவுலர்களை குறி வைத்து அடிக்க திட்டமிட்டோம். அதேபோல் சில பவுலர்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முன் தீர்மானத்துடன் களமிறங்கினோம். அதேபோல் இந்த இன்னிங்ஸில் சில ஓவர்களில் என்னால் பவுண்டரிகளை அடிக்கவே முடியவில்லை. அப்போது பூரன் சரியான நேரத்தில் சிக்சர்களை விளாசி அழுத்தத்தை குறைத்தார்.
ஒவ்வொரு பவுலருக்கு எதிராகவும் திட்டமிடுவோம். சில பவுலர்க்ர்கள் நமக்கு தொல்லை கொடுப்பார்கள். சில பவுலர்களை அடிக்க நமக்கு எளிதாக இருக்கும். டி20 கிரிக்கெட் எப்போதும் சவால் நிறைந்தது. ஏனென்றால் ஸ்கோர், இம்பேக்ட் பிளேயர் விதிகள், எந்த பவுலருக்கு எதிராக ரன்கள் சேர்ப்பது என்று ஏராளமான திட்டமிடல் தேவைப்படுகிறது. லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் இணைந்து செயல்பட்டுள்ளோம். ஆஸ்திரேலியா அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். அதனை மீண்டும் பெறுவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டும். இளம் வீரர்கள் எனது இடத்தை பிடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் ஆஸ்திரேலியா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி பங்களிக்க வேண்டும் என்பதே விருப்பம் என்று கூறியுள்ளார்.